தாரகை
மதிப்புமிக்க சிப்பி உன்னுள்
விளைந்த ஐந்து முத்துக்கள் நாங்கள்!
நீ செய்த தியாகங்களைச்
சேர்த்திருந்தால் சிகரம் தொட்டிருக்கும் அல்லவா?
சிந்திக்கத் தொடங்கிய நாளில் இருந்து
நீ சிந்தும் கண்ணீர்த்துளிகளைப்
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்!
ஐந்து முத்துக்களில் ஒன்று பேரழகாக
இருந்ததால் இறைவன் அதைத்
தனக்கென எடுத்துக்கொண்டான்!
முத்துக்களிலே மிகவும் மங்கியது
நான்தான் போல; எந்த ஆபரணமும்
என்னைச் சூடிக்கொள்ளவில்லை…
நீ சூடினாய் உன் மணிமுடியாக!
உன்னை மேம்படுத்தக் கிடைத்த
அனைத்தையும் எங்களுக்காய் விட்டுக்கொடுத்தாய்!
கொடுப்பதில் நீதான் காந்தாரியாயிற்றே!
எங்களைக்கரை ஏற்றக் கலங்கியது போதும்,
நாங்கள் கரையைக் கண்டுவிட்டோம்!
“முத்துக்கள் அனைத்தும் பெண்ணாகப் பிறந்ததால்
கைவிடப்பட்டாய்” என்கின்றனர்;
“கைவிடப்பட்டேன்” என்று ஒருபொழுதும் நினைத்துவிடாதே!
உன் கைகளை விடுவதாக நாங்கள் இல்லை,
பயப்படாமல் இறுக்கமாகப் பிடித்துக்கொள் அம்மா!
இருக்கும் காலம் வரை
இமைக்காமல் காப்போம்!
💬 கருத்துகள் (0)